சுற்றுச்சூழல் பாதுகாப்பை விடவும், மனிதர்களின் உடல்நலனும், உயிரைக் காப்பதுமே மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்டு வரும் தற்பாதுகாப்புக் கவசம், முகக்கவசங்கள், கையுறைகள், காலணிகவசங்கள் அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையான வினைகளையே ஆற்றும்.
கரோனா தொற்று தீவிரமாக சுமார் நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது அந்த பாதுகாப்புக் கவசங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் விம்லெண்டு ஜா.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், நிலப்பரப்பை மெல்ல ஆக்கிரமித்துவருகிறது. இதுபோன்ற மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் இன்னமும் அனைத்து மாநிலங்களும் பின்தங்கியே உள்ளன. கிட்டத்தட்ட 70 சதவீத மருத்துவக் கழிவுகளே முறையாக அப்புறப்படுத்தப்படுவதாகவும், 30 சதவீத மருத்துவக் கழிவுகள் நேரடியாக சாலையில் வீசப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இதுபோன்ற மருத்துவக் கழிவுகளில் இருந்து நேரடியாக பொதுமக்களுக்கு தொற்றுப் பரவும் அபாயமும் ஒரு பக்கம் மக்களை மிரட்டி வருகிறது.
ஒருவர் பயன்படுத்திய மருத்துவப் பாதுகாப்பு உபகரணம், அவரை வேண்டுமானால் கரோனாவில் இருந்து காக்கலாம். ஆனால் அதை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், அதன் மூலம் பலருக்கும் கரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.
ஏற்கனவே நாம் பேசி வந்த ஒரு விஷயம்தான்.. பிளாஸ்டிக் இல்லாத இந்தியா. ஆனால் கரோனாவால் அது காற்றில் பறக்கவிடப்பட்டது. ஆனால், கரோனா பேரிடருக்கு இடையே, பாதுகாப்பு உபகரணங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தலையும் நிச்சயம் கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.