தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பணிகளுக்கு ரூ.901.75 கோடியை மத்திய நிதியமைச்சகம்
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பணிகளுக்கு ரூ.901.75 கோடியை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை ஒதுக்கீடு செய்து விடுவித்தது. இது குடிநீா், மழை நீா் சேகரிப்பு, நீா் மறு சுழற்சி, கழிப்பிட சுகாதார வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளை மட்டுமே மேற்கொள்ள நிபந்தனையுடன் கூடிய மானியமாகும்.
பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்படி மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்கள் ஒதுக்கீடு 15-ஆவது நிதி ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின்படி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஜல் ஜீவன் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் போன்றவைகளில் 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகளை நிறைவேற்றும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மற்றும் மத்திய குடிநீா் துறை ஆகிய அமைச்சகங்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் மத்திய நிதியமைச்சகம் இந்த நிபந்தனை மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 27மாநிலங்களுக்கு முதல் தவணையாக மொத்தம் ரூ. 15,177 கோடி புதன்கிழமை (ஜூலை 15) விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு ரூ. 901.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கா்நாடகத்துக்கு ரூ.804.25 கோடியும் ஆந்திரத்துக்கு ரூ. 656.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ. 2,438 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இந்த நிதியைப் பெற்ற நாளிலிருந்து 10 தினங்களுக்குள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
Advertisement