புதுவையில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை 558 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 119 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 75 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 44 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், வாணரப்பேட்டையைச் சேர்ந்த 46 வயது ஆண், லாசுப்பேட்டையைச் சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய மூவரும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 33,096 பேரை பரிசோதித்ததில் 30,260 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 280 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.