நாமக்கல் மாவட்டம் நைனாமலை கோவில் மலைப்பாதையில் உள்ள ஏராளமான குரங்குகளுக்கு வாரந்தோறும் உணவு வழங்கும் பெருமாள் பக்தரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ளது நைனாமலை வரதராஜப் பெருமாள் மலைக் கோவில். இம்மலையின் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 3000 படிக்கட்டுகள் ஏறிச் செல்லவேண்டும்.
இப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபடுவது வழக்கம்.
தற்போது பொது முடக்கம் காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. பக்தர்களின் வருகை குறைவால் அப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன இந்தப் பாதையில் உள்ள குரங்குகளுக்கு ஏழூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பெருமாள் பக்தர் ஒருவர் உணவு பொருள்களை வாரந்தோறும் சனிக்கிழமை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த கரோனா பொது முடக்க காலங்களிலும் இவர் மலையேறி குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கி வருகிறார். தனது மளிகை கடையில் மீதமாகும் உணவு பண்டங்கள், பேக்கரி கடைகளில் மீதமாகும் உணவுப் பண்டங்களையும் வாங்கி வந்து இவர் வாரந்தோறும் சனிக்கிழமை குரங்குகளுக்கு வழங்கிவருகிறார். இவரைக் கண்டதும் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் இவரை நோக்கி ஓடிவந்து திண்பண்டங்களை பெற்றுச் செல்கின்றன. மனிதநேயமிக்க இந்தச் செயலை பக்தர்கள் பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.