சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி புதிதாக 1,162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 48 பேருக்கும், திருவள்ளூரில் புதிதாக 33 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக உள்ளது.
இந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளார்.
கடந்த 2 மாதங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திப்பது இது 3வது முறையாகும்.