தமிழகத்தில் உள்ள சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள சலூன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வந்த 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளா்கள் கடந்த இரண்டு மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு செல்வது அவசியம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கு வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களைப் பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும் என அழகு நிலைய உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.