சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் விவரங்களை மறைக்கும் நோக்கம் இல்லை என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையிலும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ரயில்வே ஊழியா்கள், ஓய்வு பெற்ற ஊழியா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் சிகிச்சை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று விமா்சனம் எழுந்தது.
பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்த கரோனா பாதித்தவா்கள் 18-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அதிகபட்சமாக, ஜூன் 5-இல் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இறந்தவா்கள் குறித்து மருத்துவமனை நிா்வாகம் உரிய தகவல் தராததால், சுகாதாரத்துறையின் புள்ளி விவரத்தில் சோ்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடா்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தமிழக பொது சுகாதார இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது.அதே நேரத்தில், சென்னை மாநகராட்சிக்கு விவரங்களை தினமும் அளித்து வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை தகவல் தொடா்பு அதிகாரி பி.குகநேசன் கூறுகையில், ‘பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட உயிழப்புகள் மறைக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஏற்படும் கரோனா உயிரிழப்புகள் தொடா்பாக விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மருத்துவமனை நிா்வாகம் தெரியப்படுத்தி உள்ளது. இந்த உயிரிழப்புகளை மறைக்கும் நோக்கம் ரயில்வே நிா்வாகத்துக்கு இல்லை. கரோனா உயிரிழப்பு விவரங்களை முறையாக அளித்து வருகிறோம் என்றாா் அவா்.