ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் ஜி.காளன் மறைவு
ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.காளன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதியம் காலமானார்.
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.காளன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூன் 10) பிற்பகல் காலமானார். அவரது உடல் நாளை (ஜூன் 11) மாலை அம்பத்தூரில் தகனம் செய்யப்படுகிறது.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
Advertisement
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக தலைவர் திரு ஜி.காளன் அவர்கள் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான இவர் பதினாறு ஆண்டுகள் தமிழக ஐ.என்.டி.யு.சி.யின் தலைவராக செயல்பட்டு தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுக்க தன்னையே அர்பணித்துக்கொண்டவர். அதற்காக பல போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை பெற்றுத் தந்தவர்.
அதேபோல, இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள ஐ.என்.டி.யு.சி சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர். நிர்வாகத்தினரோடு சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்தவர். தொழிற்சங்க தலைவராக இருந்த அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
அவரது இழப்பு தமிழக ஐ.என்.டி.யு.சி.க்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தினருக்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் ஐ.என்.டி.யு.சி நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.