முகப்பு
தமிழ்நாடு

சார்பு ஆய்வாளர் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தவர் கைது

பெருங்குடி அருகே சார்பு - ஆய்வாளர் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

பெருங்குடி அருகே சார்பு - ஆய்வாளர் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பெருங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் போல் உடையணிந்த நபர் ஒருவர் பொது மக்களிடம் பணம் வசூல் செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருமங்கலம் டிஎஸ்பி அருண் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். 

இந்நிலையில் கப்பலூர் பகுதியில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் வசூலிப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வசூல் வேட்டையிலிருந்த நபரைப் பிடித்தனர். இதனைதொடர்ந்து அந்த நபரை விசாரித்த போது  திருமங்கலத்தை அடுத்த காண்டை எர்ரமலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு என்பவரது மகன் ராமன் எனத் தெரிந்தது.

இவர் போலீஸார் போல் வேடமணிந்து தேனி, விருதுநகர் , இராமநாதபுரம் தூத்துக்குடி மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு பகுதிகளிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். இதே நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் ஆட்டுச்சந்தைப் பகுதியில் போலீஸ் போல வேடம் அணிந்து ஆட்டு வியாபாரிகளிடம் வசூல் செய்த போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.