சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக் காவலர் யோகேஸ்வரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், கடந்த 2013ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.
திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்புக் காவலர் பணியில் கடந்த சில காலங்களாகப் பணியாற்றி வருகிறார். இந்தியன் வங்கியில் உள்ள பாதுகாவலர்களுக்கான அறையில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பாத்ரூமுக்குள் சென்று தனக்குத்தானே எஸ்எல்ஆர் எனப்படும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள், யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருப்பத்தூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.