முகப்பு
தமிழ்நாடு

நிறைவாழ்வு வாழ்ந்த பண்புடைச் செம்மல் இனமானப் பேராசிரியர்: வைகோ இரங்கல்

நிறைவாழ்வு வாழ்ந்த பண்புடைச் செம்மல் இனமானப் பேராசிரியர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

நிறைவாழ்வு வாழ்ந்த பண்புடைச் செம்மல் இனமானப் பேராசிரியர்: வைகோ இரங்கல்

நிறைவாழ்வு வாழ்ந்த பண்புடைச் செம்மல் இனமானப் பேராசிரியர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

நிறைவாழ்வு வாழ்ந்த பண்புடைச் செம்மல் இனமானப் பேராசிரியர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், டாக்டர் நடேசனார், வெள்ளுடை வேந்தர் தியாகராயர், டி.ம். நாயர் அமைத்த திராவிடஇயக்கத்தின் கரு அறையை, எஃகுக் கோட்டையாக ஆக்கிய அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில், எட்டுத் திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக்காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் பேராசிரியர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.

சின்னஞ்சிறு பருவத்திலேயே, திராவிட இயக்க உணர்வு ஊட்டப் பெற்று, தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் கூர் தீட்டப் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராய் இருந்தபோதே, ஒருசாலை மாணாக்கராகிய டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களோடு இணைந்து மேடைகளில் பேசிய காலங்களில், திருவாரூரில் தமிழ்நாடு மாணவர்மன்றம் நடத்திய டாக்டர் கலைஞரின் அழைப்பை ஏற்று, பொதுக்கூட்டத்தில் முழங்கிய பெருமைக்கு உரியவர் பேராசிரியர்.

அவரது கூர்த்த மதியை, நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவுத்தேடலை அறிந்து உணர்ந்த பேரறிஞர் அண்ணாவால், பெரிதும் மதிக்கப்பட்டவர். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர். திராவிட இயக்கப் பல்கலைக்கழகத்திற்கும் அவரே பேராசிரியர்.

சொற்பெழிவு ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான். பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியச் சுற்றுப்பயணம் முடிந்து திரும்புகையில், அவரை வரவேற்று சென்னைக் கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில், பேராசிரியரின் பேச்சே விஞ்சி நின்றது. 

நெருக்கடி நிலைகாலத்தில், 1975 டிசம்பரில், கோவையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டில், அம்மாநாட்டுத் தலைவராக டாக்டர் கலைஞர் அவர்களை, தமிழரின் தூங்காத இதயமே வருக; தலைமை தாங்கிட வருக என்று அழைத்து அவர் ஆற்றிய உரை, அம்மாநாட்டின் முத்தாய்ப்பான உரை ஆகும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின்னர், சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில், அண்ணன் பேராசிரியரின் உரையே சிறப்பாக அமைந்தது. 

தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்று, உய்த்து உணர்ந்த பேராசிரியர் நிகழ்த்திய இலக்கிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும், மேடைகளில் வீசிய மெல்லிய பூந்தென்றல் ஆகும்.

பேரறிஞர் அண்ணா சென்னை வரும்போதெல்லாம், வெள்ளாளத் தெருவில் வசித்து வந்த, பேராசிரியர் இல்லத்தில்தான் நாள்கணக்கில் தங்கி, மணிக்கணக்காகப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வாராம்.

என்மீது தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டு இருந்தார். 1989 ஆம் ஆண்டு, நான் வன்னிக்காடுகளுக்குச் சென்று, இந்தியப் படைத் தாக்குதலில் நூல் இழையில் தப்பித்துத் திரும்பியபொழுது, பேராசிரியர் வீட்டுக்குச் சென்றேன். என்னை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததை எந்நாளும் மறக்க முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மக்கள் திலகம் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியகாலத்திலும், பின்னர் டாக்டர் நாவலர் கலைஞரை விட்டுப் பிரிந்த காலத்திலும், பாசமாய்ப் பழகிய நான் வெளியேற்றப்பட்ட காலத்திலும், டாக்டர் கலைஞருக்கு, கண்ணுக்கு இமையாக, உடலுக்கு உயிராக, உடன் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த மாவீரர் பேராசிரியர் என்பது, கல்வெட்டு ஆன வரலாறு ஆகும்.

கடந்த பிறந்தநாள் அன்று அவரது இல்லம் சென்றபோது, அருகில் அமரவைத்து, அன்பு நெகிழ அவர் பேசியபோது, என் கண்கள் குளமாயின. திராவிட இயக்கத்தின் வீரமும், தியாகமும், தன்னலம் அற்ற தொண்டும் நிறைந்த புகழ் வரலாற்றில், எந்நாளும் அழிக்க முடியாத தலைவர்களுள் முன்வரிசையில் இடம்பெற்ற ஆருயிர் அண்ணன் பேராசிரியர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் ஆருயிர் இளவல், தளபதி ஸ்டாலின் அவர்களை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, தன் உயிரினும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த, பண்புடைச் செம்மல், 100 அகவையைக் கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். 

பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக, இன்றுமுதல் அடுத்த மூன்று நாள்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →