முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம்

திருக்கோவிலூர்- கீழையூர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:


திருக்கோவிலூர்- கீழையூர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை, அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், உற்சவ பஞ்சமூர்த்திகளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு நமச்சிவாய எனும் பஞ்சாச்சர மந்திர கோஷத்துடன், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் விநாயகர், சோமாஸ்கந்தர் (வீரட்டானேஸ்வரர்), சிவானந்தவல்லி ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வந்தனர்.  தொடர் ந்து பிற்பகல் 3.30 மணிக்கு திருத்தேர்கள் நிலையை அடைந்தன.


மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மஹா தீபாராதனை நடைபெற்று, சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

காலை 10 மணிக்கு ஆலய வளாகத்தில் ஊடல் உற்சவமும், முற்பகல் 11 மணிக்கு சூர்ணோற்சவமும் (மஞ்சள்நீர்) நடைபெற்று, பிற்பகல் 11.30 மணியளவில் தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பக்தர்கள் திரளாகப் பங்குகொண்டு புனித நீராடினால், பித்ருக்கள் (முன்னோர்கள்) பூர்வ ஜென்ம பாவ தோஷம் நிவர்த்தியாகி, தங்களுடைய சகல செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். 

தீர்த்தவாரி முடிந்து, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, வீரட்டானேஸ்வரர் மற்றும் சிவானந்தவல்லி அம்பிகைக்கு கலசாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது. 

இரவு 7 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.