சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா. கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி இன்று ஔவையார் விருது வழங்கி கௌரவித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்க ஊக்கப்படுத்தியது, ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக 2020-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம், சமூகத்திற்கு தனித்துவமான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “ஔவையார் விருது” எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்கள். அதன்படி, 2012-ஆம் ஆண்டு முதல் “ஔவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி ரா.கண்ணகி, 1992-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறார். சுமார் 350- க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளதோடு, மகளிர் சுய உதவி குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
ரா.கண்ணகி, கடந்த 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சி, வார்டு 16- ல் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்துபவராக பணியாற்றி, 528 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதோடு, விழுதுகள் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் துவக்கி நடத்தி வருகிறார்.
தகன மேடைகளில் சடலங்களை எரிக்கும் பணிகள் ஆண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதனைத் தகர்த்து, பெண்களாலும் அப்பணியை மேற்கொள்ள இயலும் என்பதை நிரூபிக்கும் வகையில், துணிச்சலுடன் ரா.கண்ணகி திருவண்ணாமலை நகராட்சியில் எரிவாயு தகன மேடை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி இறுதி சடங்கினை மேற்கொண்டுள்ளார். இவரின் தன்னலமற்ற சேவைகளுக்காக மாவட்ட அளவில், 2016-ம் ஆண்டின் மகளிர் தின விருது, 2018-ம் ஆண்டிற்கான குடியரசு தின விருது, மண்கழிவுகள் மேலாண்மைக்காக 2018-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் சமூகசேவை புரிந்துவரும் ரா. கண்ணகி அவர்களை கௌரவிக்கும் பொருட்டு, 2020-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று, ரா. கண்ணகி அவர்களுக்கு ஔவையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
ஔவையார் விருதினை பெற்றுக் கொண்ட ரா. கண்ணகி, தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதல்வருக்குத் தெரிவித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.