தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டன வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்கள், பயிற்சி நிறுவனங்கள் என ஈரோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது அதேசமயம் பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த ஜவுளிச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜவுளிக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவுதலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. ஈரோட்டில் செல்லும் தனியார் பஸ்களுக்கும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. இதில் பஸ்களின் வெளிப்பகுதி, படிக்கட்டுகள், கைப்பிடிகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பயணிகள் கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கு கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது. மேலும், கோவில்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பலகைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஒளிரும் ஈரோடு தொண்டு நிறுவனத்தின் மூலமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பேருந்து நிலையம் அரசு பொது மருத்துவமனை உழவர் சந்தை தினசரி மார்க்கெட் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களில் மக்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தமாக கழுகுமலையில் வாசனை வைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சத்தி கணேசன் இதனை திறந்து வைத்தார். உடன் ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னச்சாமி உள்ளார்.