தமிழ்நாடு

பின்னேற்பு மானியத் திட்டங்களில் குளறுபடி: நெருக்கடியில் வேளாண் அலுவலர்கள்!

பின்னேற்பு மானியத் திட்டங்கள் செயல்படுத்தும் நடைமுறையில்  தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாறுதல் குளறுபடியால், விவசாயிகளிடமிருந்து மானியத் தொகையை

ஆ. நங்கையார் மணி

திண்டுக்கல்: பின்னேற்பு மானியத் திட்டங்கள் செயல்படுத்தும் நடைமுறையில்  தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாறுதல் குளறுபடியால், விவசாயிகளிடமிருந்து மானியத் தொகையை திரும்பப் பெற வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வேளாண்மை பாடப் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் படித்தவர்கள், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக, வேளாண்மைத் துறையில் அரசுப் பணியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த பணியாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை, பயிற்சி வழங்கும் பணிகளுக்கு மாற்றாக, வேளாண்மை தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு முகவர்களாகச் செயல்பட்டு வருவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க  வேண்டிய வேளாண்மை அலுவலர்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் முகவர் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதுமுள்ள வேளாண்மை அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயித்து நெருக்கடி அளிக்கப்படுகிறது.
அதேபோல், நுண்ணீர் பாசனத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,700 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை துரிதமாக செலவிட வேண்டும் என்ற காரணத்துக்காக, வாரந்தோறும் காணொலி காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. 
உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை  தவிர்க்கும் வகையில், பயனாளிகளைக் கட்டாயப்படுத்தி இத்திட்டத்தில் கீழ் நிலை அலுவலர்கள் சேர்த்து வருகின்றனர். 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பின்னேற்பு மானியத் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளால், விவசாயிகள் மட்டுமின்றி வேளாண்மை அலுவலர்களும் அலைகழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் வங்கிக்  கணக்கில் செலுத்தப்படும் மானியத் தொகையை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்காக, வேளாண்மைத் துறை அலுவலர்கள் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பின்னேற்பு மானியத் திட்டம்:    இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் இரா. சச்சிதானந்தம் கூறியதாவது: விவசாயிகளுக்கு தார்பாய், கை தெளிப்பான், விசைத் தெளிப்பான், தேனீப் பெட்டி, இன கவர்ச்சிப் பொறி உள்ளிட்ட பண்ணைக் கருவிகள் மற்றும் பயிர் ஊக்கிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருள்கள் வேளாண் அலுவலகங்களில் வரவு வைக்கப்பட்டு, வேளாண் கிடங்குகள் மூலமாக மானியத் தொகையை கழித்து மீதத் தொகையை மட்டுமே விவசாயிகளிடமிருந்து வசூலித்து கடந்த காலங்களில் விநியோகிக்கப்பட்டு வந்தன. 
அதன்பின்னர், பின்னேற்பு மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் விரும்பும் கருவிகளை சம்பந்தப்பட்ட பகுதியின் வேளாண் அலுவலரின் ஒப்புதலோடு வெளிச்சந்தையில் பெற்றுக்கொண்டு, அதற்கான ரசீது வேளாண் அலுவலகத்தில் ஒப்படைக்கும்பட்சத்தில் 2 மாதங்களுக்குள் விவசாயிக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், வேளாண் கருவிகளை விநியோகிக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டிய நிர்பந்தத்துக்காக, சில குளறுபடியான மாற்றங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால், விவசாயிகள் விரும்பும் பொருளை விரும்பும் நிறுவனத்திடமிருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
பொருள்களிலும் தரமில்லை:  புதிய நடைமுறைப்படி வேளாண் கருவிகளை விநியோகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரமில்லாத பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு, அதனை விவசாயிகளிடம் விற்பனை செய்ய வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு நெருக்கடி அளிக்கின்றன. விநியோகிக்கப்படவுள்ள விவசாயிகளின் விவரங்களை (பெயர், முகவரி உள்ளிட்டவை) உடனடியாக அனுப்பக் கோரி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இதில் கால தாமதம் ஏற்படும்பட்சத்தில், நிரப்பப்படாத ரசீதுகளை அனுப்பி வைத்து, அதன்மூலம் மொத்தத் தொகையை அந்த நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தனியார் நிறுவனத்தின் நிர்பந்தம் காரணமாக மானியத்  திட்டத்துக்கான பணத்தை வழங்கும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை ஏற்றப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.


பணத்தை திருப்பித் தருவதே தகுதியா?

அட்மா திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பயிர் ஊக்கிகள் வழங்கப்படுகின்றன. இதனை, விவசாயிகளே நேரடியாக வந்து வாங்கியதாக தனியார் நிறுவனம் சார்பில் ரசீது வழங்கப்படுகிறது. இதற்கான மானியத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் மட்டுமே ஏற்றப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட விவசாயியிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுவிட முடியுமா என்ற தகுதியின் அடிப்படையிலேயே பயனாளிகளை வேளாண்மை அலுவலர்கள் தேர்வு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT