கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக ஏற்கெனவே கேட்டிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அரசிடம் ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனையின்போது தற்போதைக்கு சென்னையில் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
- 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்.
- பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
- மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, முந்தைய காணொலிக் காட்சி வாயிலான உரையாடலின்போது ஏற்கெனவே வலியுறுத்திய ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும்.
- நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
- மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்வதற்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும். இந்த மொத்த செலவையும் தற்போது மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
- விமான சேவைகளை மே 31 வரை தொடங்க வேண்டாம்.
- சென்னையில் அதிகளவில் கரோனா தொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.