சென்னை: சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான ஓராசிரியர் பள்ளிகள் மூலம் தூர்வாரப்பட்ட குளங்களால், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 1,057 கிராமங்களில், மாலை நேர இலவச வகுப்புகளை இந்தப் பள்ளிகள் நடத்துகின்றன. இதன் மூலம் 31,096 குழந்தைகள் அடிப்படை கல்வியைப் பெறுகின்றனர். இது மட்டுமின்றி, பல்வேறு சமூகப் பணிகளும் இந்தப் பள்ளிகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பத்து கிராமங்களில் உள்ள கோயில் குளங்கள், ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 350 செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. இதற்கு தொழிலதிபர் ஆர். பா.கிருஷ்ணம்மாச்சாரி மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் சமுக சேவகர் வினோத் பிரகாஷ் நடத்தும் இந்தியா டெவலப்மெண்ட் அண்டு ரிலீப் பண்ட் நிறுவனம் உதவி செய்துள்ளது.
இதன் மூலம் மழைக்காலத்தில், அந்தக் குளத்தில் தேங்கிய தண்ணீரால் சுமார் 77 ஆயிரம் கிராம மக்கள் பயனடைந்து உள்ளனர். தற்போது அதே அமெரிக்க தொண்டு நிறுவனம் இரண்டாம் முறையாக அளித்துள்ள நன்கொடை மூலம், குளங்களைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 13-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், அக்கினம்பட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், வேணுகோபாலபுரம் கிராம விவசாய குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் தொடங்கின. இதன் செலவு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனடையும் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சுமார் 18,500 நபர்கள். இவை தவிர ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் கிராமத்தில் அம்மன் கோயில் குளம், செங்கல்பட்டு மாவட்டம் , ஜமீன் எண்டத்தூர் கிராம குளம் மற்றும் மூன்று வெவ்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.