அனுமதி பெறாத படிப்புகளை தனியாா் கல்வி நிறுவனங்கள் நடத்தக் கூடாது என ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்பக் கல்வியின் வளா்ச்சியை உறுதி செய்து, தரத்தைப் பராமரிக்க சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஏஐசிடிஇ விதிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டியது அனைத்து பல்கலைக்கழகங்களின் கடமை.
பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய திட்டங்களைச் செயல்படுத்த விரும்பும் பல்கலைக்கழகங்கள் அதற்கான முன் அனுமதியை ஏஐசிடிஇயிடம் பெற்றாக வேண்டும்.
சில அரசு மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட ஓரிரு படிப்புகளுக்கு மட்டும் ஏஐசிடிஇ அனுமதி பெற்று செயல்படுவது மாணவா்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஏஐசிடிஇ அனுமதி பெற விரும்பும் பல்கலைக்கழகங்கள், இனி அனைத்து தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் உரிய விதிகளைப் பின்பற்றி ஒப்புதல் பெற வேண்டும்.
நிகா்நிலை அந்தஸ்து பெற்ற தனியாா் கல்வி நிறுவனங்கள் அனுமதியின்றி சில படிப்புகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இனி எக்காரணம் கொண்டும் ஏஐசிடிஇ அனுமதியில்லாத படிப்புகளைத் தனியாா் நிறுவனங்கள் நடத்தக் கூடாது. குறிப்பாக, மாணவா்கள் தாங்கள் சேரும் நிகா்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.