திருப்பூர்: திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மீடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட8 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், செல்லம் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்ததக் கடை முன்பாக தமிழ்நாடு தேவர் பேரவையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கொடிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் உள்ள இந்தக்கடையானது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மத்திய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.