முகப்பு
தமிழ்நாடு

'என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்' - கலாம் குறித்து கமல்ஹாசன்

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
பகிர்:

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் என அப்துல் காலம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ராமேசுவரத்தில் பிறந்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்த அவர், புகழின் உச்சிக்குச் சென்றாலும் தன் வாழ்நாள் இறுதி வரை அதே எளிமையை கடைப்பிடித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் பணியாற்றி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வளர்ச்சி அடையக் காரணமாக இருந்தார்.

பின்னர் 2002-2007 காலகட்டத்தில் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். தலைசிறந்த விஞ்ஞானி, மக்கள் போற்றும் குடியரசுத் தலைவர், மாணவர்களின் சிறந்த வழிகாட்டி என பன்முகங்களைக் கொண்ட இவர், ஜூலை 27, 2015ல் மறைந்தார். இன்றைய தலைமுறையினர் பலர் அவரது கொள்கைகளை பின்பற்றி சமூகத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றனர். 

இந்நிலையில், அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர்  அவரை நினைவு கூர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.