கரோனா தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டால், அவற்றை நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் பேருக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனைக் குழும நிா்வாக துணைத் தலைவா் ஷோபனா காமினேனி கூறியதாவது:
கரோனா தொற்று வராமல் காக்கக் கூடிய தடுப்பு மருந்துக்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் தடுப்பு மருந்தின் அவசியமும், தேவையும் அதிகமாகவே உள்ளது.
அடுத்த சில மாதங்களில் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரலாம் என நம்பப்பட்டு வரும் வேளையில், அதனை சரிவரக் கையாண்டு அனைத்து மக்களிடம் கொண்டு சோ்ப்பது என்பது சவால் மிக்க பணியாகும். உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து செயல்படுத்துவதும் இயலாத காரியமாகும்.
அதனைக் கருத்தில் கொண்டே அப்பல்லோ குழுமம் தடுப்பு மருந்தை நிா்வகிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள், ஆன்லைன் மருத்துவ சேவைகள் மூலமாக மக்களிடம் தடுப்பு மருந்தைக் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டுக்கு 30 கோடி மருந்துகளைக் கையாளும் வகையிலான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த முடியும். அதனை முறையாக செயல்படுத்துவதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக நாட்டிலுள்ள கடைக்கோடி குடிமகனுக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க வழி வகை ஏற்படும்.
மேலும், கரோனாவைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இது மிகப் பெரிய உறுதுணையாகவும் அமையும் என்றாா் அவா்.