பெண்களைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவில் செல்லவதற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவோர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என ஏற்கெனவே உயர்நீதிமன்றம் கூறி இருந்ததை, உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்ய பாஜக சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும். மத்திய அரசைக் குறைசொல்வதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியவர்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுவோர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையைத் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கவில்லை. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவருடைய முடிவுதான்.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றிபெறத் தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் பலமாக அமையும் என்றார்.