முகப்பு
தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் கிராமங்களை சூழ்ந்த மழை வெள்ளம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கிராமங்களில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கிராமங்களில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியார்புரம், கரட்டுப்பட்டி  ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த கனமழையில் கிராமங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கரட்டுப்பட்டியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. ரெங்கசமுத்திரம்- நாச்சியார்புரம் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 

நாச்சியார்புரம் கிராமத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

சாலைகளில்  தண்ணீர் தேங்கியுள்ள தகவலறிந்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊராட்சி அலுவலர்கள் அங்கு சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறியது: ஊராட்சி நிர்வாகம் சார்பில்  கிராமத்தில் முறையான மழைநீர் வடிகால் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. 

மேலும், இங்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.