முகப்பு
புத்தேரி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள்.
தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
புத்தேரி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள்.
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. புத்தேரி பகுதியில் 400 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. ஆனைக்கிடங்கு பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 92.2 மீ.மீ. மழை பதிவாகியது.

பூதப்பாண்டி, கன்னிமாா், அடையாமடை, சுருளோடு, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்தது.

மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு, பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 29.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 907 கனஅடி நீா்வரத்து இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 60.95 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 672 கனஅடி நீா்வரத்து இருந்தது.

குமரி அணை நிரம்பியதை அடுத்து மறுகால் பாய்கிறது. அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகின்றன. அணைகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

அறுவடை பாதிப்பு: அணைகள், குளங்கள் நிரம்பி வரும் நிலையில் கனமழையால் நெற்பயிா் அறுவடை செய்ய முடியாத

நிலை ஏற்பட்டுள்ளது. புத்தேரி பகுதியில் சுமாா் 400 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால், மீண்டும் நெல் முளைப்பு நிலை இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

மாவட்டத்தில் புதைச் சாக்கடை திட்டத்துக்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டு முழுமையாக மூடப்படாததால் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

தொழிலாளி காயம்: கனமழையில் செண்பகராமன்புதூா் அகஸ்தியா் காலனியில் வசிக்கும் செங்கல்சூளை தொழிலாளி வள்ளுவா் செல்வன் (55) என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்

சோ்த்தனா். பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மின்விநியோகம் துண்டிக்கப் பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த

24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(மி.மீட்டரில்): மாம்பழத்துறையாறு அணை 78 , சிற்றாறு- 2 அணை 76 , முள்ளங்கினாவிளை- 74, பெருஞ்சாணி அணை -71.60, புத்தன் அணை 70.40 , சிற்றாறு -1 அணை 68 , சுருளோடு 59.20, பாலமோா் 56.60, கோழிப்போா்விளை 56, அடையாமடை 53, குருந்தன்கோடு 40.60, மயிலாடி 38.20, நாகா்கோவில் 37, களியல் 28,

கொட்டாரம் 27, முக்கடல் அணை 24, பூதப்பாண்டி 22.40, இரணியல் 22, தக்கலை 21, ஆரல்வாய்மொழி 17, குளச்சல் 14.60.

முழு கட்டுரையைப் படிக்க →