அம்பாசமுத்திரம்: மகாளய அமாவாசையையொட்டி, பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் பக்தர்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா பொது முடக்கம் காரணமாக, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தரிசனம், நதிகளில் புனித நீராடுவது உள்பட பொது இடங்களில் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த செப். 1 முதல் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம், நதிகளில் புனித நீராடுதல் போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (செப். 17) மகாளய அமாவாசையையொட்டி, தாமிரவருணி ஆற்றில் நீராடுவதற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 20) தடை விதித்துள்ளது.
இதையடுத்து, பாபநாசம் கோயில் முன் தாமிரவருணி படித்துறை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் குளிக்கச் செல்ல முடியாதவாறு தடுப்புகள்அமைக்கப்பட்டுள்ளன. வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சுவாமி தரிசனம் செய்வதற்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் செல்லும்வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதற்காக, வெளியூர்களிலிருந்து பாபநாசம் வருவோரின் வாகனங்கள் விக்கிரமசிங்கபுரம் டாணாவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் கோயிலுக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பொதுமக்களும், பக்தர்களும் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என, கோயில் செயல் அலுவலர், நகராட்சி ஆணையர், காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.