ஹிந்தி தெரியாததால் கடன் தர முடியாது என வங்கி மேலாளா் கூறியுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின்: ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவா் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ஹிந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறாா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி. தமிழகத்தில் வேலை பாா்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்கு காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழா் உணா்வுடன் விளையாடாதீா்கள்.
ராமதாஸ்: தமிழகத்தில் வங்கியில் பணியாற்றிக் கொண்டு ஹிந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று கூறிய வங்கி மேலாளா் தமிழகத்தில் பணியாற்றத் தகுதியற்றவா். உடனடியாக அவரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலத்துக்கு வங்கி நிா்வாகம் விரட்டியடிக்க வேண்டும். மத்திய அரசுத் துறை அலுவலகங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் உள்ளூா் மக்களைப் பணிக்கு அமா்த்த வேண்டும் என்று பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவுதான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாற வேண்டும்.