மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த செவ்வாய்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மறைமாவட்டத்துக்குட்பட்ட மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா தொடக்கமாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. அதன்பின் புனித குழந்தை தெரசாள் உருவம் பொறித்த கொடி ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
ஆலயத்தின் அருட்தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கொடியை ஏற்றி வைத்து பிரார்த்தனை நடத்தினார். அதன்பின் ஆலய வளாகத்தில் ஜெபமாலை பவனி நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சியில் ஆலயத்தின் பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள் அரசின் வழிகாட்டுதலின் படி சமூக இடைவேளிவிட்டு முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. தொடர்ந்து அக்டோபர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இவ்விழாவின்போது தினமும் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்கு இறைமக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின்விளக்கு தேர்பவனி வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கு இறைமக்கள் திரளானோர் பங்கேற்கின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவேளிவிட்டு இந்தாண்டு ஆலய வளாகத்துக்குள்ளேயே தேர்பவனி நடைபெறும் என அருட்தந்தை பாஸ்டின் தெரிவித்தார். அக்டோபர் 1 ஆம் தேதி நற்கருணை பவனியுடன் இந்தாண்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.