தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்கக் கோரிய மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத் தலைவர் பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு கல்வியாண்டு முடியும் நேரத்தில் இந்த தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை உடனடியாக கல்வி நிறுவனங்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஏராளமான கல்லூரிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதமே அரசுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவைப் பரிசீலித்து 8 வாரங்களில் தமிழக அரசு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.