கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் சோதனைச் சாவடியில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றுச் செல்லலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கொடைக்கானல் நுழைவு வாயிலான வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் வழக்கமான சோதனை நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைச் சாலையில் 4 இடங்களில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. மீண்டும் சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவக் குழு, காவல் துறை ஆகியோர் நடத்தும் விசாரணையால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, அங்குள்ள அலுவலர்களிடம் வாக்கு வாதம் ஏற்படுகிறது
இதனால் பாதிநேரம் சோதனையிடுவதிலேயே செல்வதால் சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானலில் இருக்கும் முக்கிய இடங்களை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
வாகனங்களை சோதனையிடும் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுடன் இணக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கொடைக்கானலுக்கு ஏன் வருகிறோம் என்ற மன நிலைக்கு தள்ளப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகிறார்கள்.