ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபர்ட் பயஸ் தனது மனைவி பிரேமாவுக்கு விசா வழங்கக் கோரிய வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த மனுவில், தன்னை சந்திக்க இந்தியா வரும் இலங்கையில் உள்ள தனது மனைவி பிரேமாவுக்கு விசா வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கடந்த 2019- ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தபோது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் சி.கண்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், பிரேமா மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என பயஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குற்ற வழக்குகளை காரணம் காட்டி தான் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் விசா கேட்டு விண்ணப்பித்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. க்யூ பிரிவு காவல்துறை செய்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பிரேமாவின் பெயர் உள்துறை அமைச்சகத்தின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த தடைப்பட்டியலில் பிரேமாவின் பெயர் ஏன் சேர்க்கபட்டது என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது க்யூ பிரிவு காவல்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் பெறலாம் என பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மத்திய அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று விசாரணையை அக்டோபர் 2 - வது வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.