முகப்பு
தமிழ்நாடு

வள்ளுவர் கோட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத கூட்டம்: ரஜினி ரசிகர்கள் எழுச்சி

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது. 

Updated On : 10 ஜனவரி 2021, 3:35 pm IST
சென்னை வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்.
பகிர்:

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கடந்த மாதம் அறிவித்தார். இதனால் பல ஆண்டுகளாக காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களும் நடைபெற்றன. 

இந்நிலையில், உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என டிசம்பர் இறுதியில் ரஜினி அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது. தொடர்ந்து ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.  

Advertisement

இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். சனிக்கிழமை இதுதொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை பெற்று, வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவு முதல் ஏற்பாடுகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருந்த நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் வரத் தொடங்கினர். அறிவிப்பு வெளியான ஒருநாளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் திரளத் தொடங்கினர். 

இன்று நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்ட நிலையில், ரசிகர்களின் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்களில் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பலரும் திரளாக கலந்துகொண்டுள்ளனர். 

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென மக்கள் மன்றத்தினர் சிலர் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி

இதுபோன்ற ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிா்வாகி விடுத்துள்ள எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல்  ரசிகர்கள் கூடியுள்ளனர். 

இன்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் எந்த அமைப்பையும் சாராத ரஜினி ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்துகொண்டிருப்பதால் காவல்துறையினர் திணறி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியுள்ள நிலையில் பலர் வள்ளுவர் கோட்டத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை வள்ளுவர் கோட்டத்தில் அரசியல் கட்சி ஆர்ப்பாட்டங்கள் பல நடைபெற்றிருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மக்கள் கூட்டம் கூடியுள்ளது. நூற்றுக்கணக்கில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இணைந்து ஆர்பாட்டத்தில் ஒரு சிறப்பு மருத்துவக்குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். 

தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்ப வேண்டும் என்று விரும்புவர்களே இதில் கலந்துகொண்டுள்ளனர். அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதே அங்குள்ளவர்களின் பிரதான கோரிக்கையாகவும் இருக்கிறது. அரசியல் மாற்றத்தை விரும்பும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவரை அரசியலுக்கு வரவழைக்க இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை இதுவரை பார்த்ததில்லை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.