கூடலூர் வனச்சரகத்தில் வன விலங்குகளுக்கு குடிதண்ணீர்
கூடலூர் வனச்சரகப்பகுதியில் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் வன விலங்குகளுக்குத் தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச் சரணாலயப் பகுதியான கூடலூர் வனச்சரகப்பகுதியில் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் வன விலங்குகளுக்குத் தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
தற்போது கோடைக்காலம் தொடங்கி, வெயில் கடுமையாக அடிக்கத்தொடங்கி உள்ளது. இதனால் வனப்பகுதியில் நீர் நிலை ஓடைகளில் தண்ணீர் வரத்து இல்லை. காட்டுக்குள் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரும். இவைகளின் நடமாட்டத்தைத் தடுக்க கோடைக்காலங்களில் வனத்துறையினர் காட்டுக்குள் தொட்டி அமைத்து அதன்மூலம் தண்ணீர் ஊற்றி வருவார்கள், விலங்குகள் தண்ணீரை அருந்துவதால் ஊருக்குள் அதன் நடமாட்டம் இருக்காது.
இதன் எதிரொலியாக புதன்கிழமை கூடலூர் வனச்சரக பகுதிக்குள் கட்டப்பட்ட செயற்கை குளங்களான அகலமான சிமிண்ட் தொட்டிகளில், டேங்கர் டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
இது பற்றி வனச்சரகர் அருண்குமார் கூறியது,
கோடைக் காலத்தில் வன விலங்குகளுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது, தண்ணீரின் அளவை கண்காணித்து கோடைக்காலம் முழுவதும் ஊற்றப்படும் என்றார்.