போடி அருகே எம்.பி. கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது: கண்டித்து மறியல்
போடி அருகே வியாழக்கிழமை தேனி மக்களவை உறுப்பினர் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடி: போடி அருகே வியாழக்கிழமை தேனி மக்களவை உறுப்பினர் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியை பார்வையிட வந்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கார் சேதமடைந்தது.
இதுகுறித்து கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கொடுத்த புகாரில் 17-க்கும் மேற்பட்டவர்கள் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
Advertisement
இதில், அமமுகவைச் சேர்ந்த மாயி (58) என்பவரை போலீஸார் வியாழக்கிழமை காலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு பேருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்மணிகண்டன் மற்றும் போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அரை மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டது.