கரோனா: தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்?
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
அதன்படி, உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை, பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்நிலையில், கரோனா தடுப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று (ஏப். 12) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தேவைப்படும்பட்சத்தில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்தும் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்தும் அரசிடமிருந்து விரைவில் அதிகாரபூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அவசர பேரிடர் காலம் கருதி, தேர்தல் ஆணைய அனுமதியுடன் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.