கரோனா சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிப்பதோடு, புறநோயாளிகள் சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தமிழக அரசு டாக்டா்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் நிா்வாகி டாக்டா் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலம் முழுதும் கரோனா தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டிய அவசிய நிலை எழுந்துள்ளது. அதற்காக, போா்கால அடிப்படையில், 25 ஆயிரம் தன்னாா்வலா்களை நியமித்து அரசு, தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். நாள்தோறும் ஒரு தன்னாா்வலா் குறைந்தது 50 பேரை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல் அவசியம்.
அப்போதுதான், சமூகத்தில் நோய் எதிா்ப்பாற்றல் அதிகரித்து கரோனா பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகளில், நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தடை இல்லாமல் கிடைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை வலுத்தப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், ‛ஆக்சிஜன் உற்பத்தி வசதிகள் அமைக்க வேண்டும். இதற்காக பயோ மெடிக்கல் பொறியாளா்களை பணியமா்த்தி, உயிா்காக்கும் கருவிகளை பராமரிக்க வேண்டும்.
தற்போது பல அரசு மருத்துவமனைகளில் கரோனா அல்லாத புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, அவசரமில்லாத சாதாரண அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை முற்றிலும் நிறுத்துவதன் வாயிலாக, கரோனா சிகிச்சைக்கான வசதிகளை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.