தமிழக எல்லையில் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் சோதனை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வருவோர், கம்பம் பகுதியில் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பம்: கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வருவோர், கம்பம் பகுதியில் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதில்லாமல், கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வர நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள் ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் இல்லாததால் திரும்பிச் செல்கின்றனர்.
கேரளத்திலிருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் தேவை என்று அரசு உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான குமுளி மற்றும் கம்பம்மெட்டு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை கேரளத்திலிருந்து குமுளி வழியாக தமிழகம் வந்த பொதுமக்களிடம் நெகடிவ் சான்றிதழ் சோதனை செய்தனர், இதனால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் நின்றனர். ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் இல்லாதவர்களை தமிழகக் காவல்துறையினர் திருப்பி அனுப்பினார்கள்.
இதுபற்றி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலக்காய் தோட்டத் தொழிலாளி முத்துக்குமார் என்பவர் கூறுகையில், தமிழக அரசு ஆக.5 முதல் கேரளத்தில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு வர ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழகக் காவல்துறையினர் குமுளி மற்றும் கம்பம்மெட்டு பகுதிகளில் தற்போது சோதனை நடத்தி, சான்றிதழ் இல்லாதவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர் என்றார்.
கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் குமுளி பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்துநின்று வருகின்றனர்.
கேரள மாநிலம் குமுளியில் தனியார் மருத்துவமனை மூலம் ரேபிட் கிட் மூலம் உடனடியாக சோதனை செய்து, நெகடிவ் சான்றிதழ் வழங்கப்படுகிறது, இந்தச் சான்றிதழை தமிழக காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு, தேனி மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
உடனடி சான்றிதழ்
கேரள மாநிலம் குமுளியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூபாய் 350 கட்டணம் செலுத்தி 15 நிமிடத்திற்குள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது என்று குமுளியை சேர்ந்த ஷாஜி என்பவர் தெரிவித்தார்.