முகப்பு
தமிழ்நாடு

விதிமீறல்: 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவகங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமான முறையில் உணவு பொருள்கள் கையாளப்படுகின்றனவா எனவும் பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்து ஆய்வு செய்யவும், சென்னை மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், உணவகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து விதிமீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி, ஆக.19-ஆம் தேதி, அனைத்து மண்டலங்களில் உள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடுகளை சரி செய்யுமாறு சம்பந்தப்பட்ட உணவகங்களின் மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் 8 உணவகங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதே நேரம், பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களிடமும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து உணவகங்களும் அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும், உணவகங்களுக்ககான பொது சுகாதார சட்டத்தின்படியும் தரமான, சுகாதாரமான உணவை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →