சென்னை: மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக நீட்டித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதன் விவரம்: கடந்த 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, அரசுப் பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் 12 மாதங்களாக நீட்டித்து, நிதித்துறை அமைச்சா் அறிவிப்பை வெளியிட்டாா். இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, இரண்டு குழந்தைகளுக்கு உள்பட்டுள்ள அரசுப் பெண் ஊழியா்கள் மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிக்கும் நிலையில், முழு ஊதியத்துடன் 12 மாதங்களாக மகப்பேறு விடுப்பை நீட்டித்து உத்தரவிடுகிறது.
இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து, மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளோருக்கும், அன்றிலிருந்து மகப்பேறு விடுப்பில் இருப்போருக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.