மின் பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு வரி ஏய்ப்பினை கண்டுபிடிக்க வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் அரசு செயலர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை, வணிகவரி ஆணையர் மற்றும் வணிகவரி உயர் அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது.
நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் திறம்பட செயல்பட்டு வரிஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
வரிஏய்ப்பிற்கு உள்ளாகும் பொருட்களாக கண்டறியப்படும் கட்டுமானத்திற்குரிய இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிளைவுட் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வணிகர்கள் மீது தனி கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வின்போது உற்பத்தியாளரின் மின்பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு, வரிஏய்ப்பு நடைபெற்றிருக்கிறதா என விஞ்ஞானப்பூர்வமாகவும், சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் ஆய்வு செய்து வரிஏய்ப்பைத் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.