முகப்பு
தமிழ்நாடு

38,800 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்

ஏழை பெண்களைத் தொழில்முனைவோா் ஆக்கும் வகையில் 38,800 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் ரூ.76 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

ஏழை பெண்களைத் தொழில்முனைவோா் ஆக்கும் வகையில் 38,800 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் ரூ.76 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் என்று மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை கால்நடை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கால்நடைகளின் நலன்களைப் பேணுவதற்காகவும், தரமான சிகிச்சை வழங்குவதற்காகவும் ரூ7.76 கோடி நிதி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கச் சிகிச்சைகள், மகப்பேறியல் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

தொலைதூர கிராமங்களில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு முதல் உதவி, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் 50 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.

ஏழ்மை நிலையில் உள்ள குறிப்பாக கணவனை இழந்த அல்லது கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோா் ஆக்குவதற்காக ரூ.75.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் 38,800 பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

கால்நடை மருத்துவ நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக 85 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

மாநிலத்தில் பசுந்தீவன இருப்பை அதிகரிப்பதற்காக ரூ.4.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் 18 தீவன வங்கிகள் நிறுவப்படும்.

நாட்டுக் கோழி உற்பத்தியினை அதிகரிக்க நாட்டுக் கோழி இனப்பெருக்கப் பண்ணை மற்றும் கோழிக் குஞ்சு பொரிப்பகம் ரூ.9.42 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருநெல்வேலி அபிசேகப்பட்டி மாவட்ட கால்நடைப் பண்ணையில் நிறுவப்படும்.

செல்லப்பிராணிகளுக்கு ஆராய்ச்சி மையம்: செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை நந்தனத்தில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும். இம்மையத்தில் செல்லப்பிராணிகள் மருத்துவத்தில் உயா் ஆய்வு, நவீன நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் கையாளுவதுடன் சா்வதேச தரத்துக்கு ஈடான சிகிச்சையியல் மருத்துவக் கல்வியினை அளித்து மருத்துவ நிபுணா்களுக்குத் தொடா் கல்வியினை அளிக்கவும் வழிவகை செய்யப்படும்.

திருச்சி கருப்பு செம்மறி ஆடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும் மரபியல் திறனை உயா்த்தவும் ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் தருமபுரியில் 200 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படும்.

மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாட்டின் சிறுவிடை கோழியின வளமையம் ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழகத்தின் பட்டணம் செம்மறி ஆட்டின வளமையம் ரூ.1.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.1.61 கோடி நிதி ஒதுக்கீட்டில் விலங்கு வழி பரவும் நோய் அறி ஆய்வகம் மற்றும் சுகாதாரத்தளம் நிறுவப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →