டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று ஆக-31 (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் பங்கேற்றார்.
கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று இருந்ததால் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெரியவடகம்பட்டியிலுள்ள அவரது வீட்டில் அவரது தாயார் சரோஜா,தம்பிகள் குமார், கோபி மற்றும் நண்பர்கள் தொலைக்காட்சியை நேரலையில் கண்டுகளித்தனர்.
இதையும் படிக்க | பாராலிம்பிக்: மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து
தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார். இதனை நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருடைய சகோதரர்களும் நண்பர்களும் உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பனின் தாய் சரோஜா தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாகவும் வெள்ளி வென்றதும் மகிழ்ச்சிதான் என்றும் நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை தன்னுடைய மகன் பதக்கம் வென்றது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றிருப்பது பெரியவடகம்பட்டி கிராம மக்களையும் அவரது நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.