காஷ்மீர் மாநிலத்தின் பந்த் சவுக் பகுதியில் உள்ள ஜூவன் என்ற இடத்தில் காவல்துறை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீநகரின் ஜூவன் பகுதியில் நேற்று (டிச.13) அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.பயங்கரவாதிகளின் இச்செயலைக் பல தலைவர்களும் கண்டித்து வருகிற நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தையும் இரங்கலையும் பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் 'ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்ற காவலர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்’. என தெரிவித்திருக்கிறார்.