குடும்பத் தகராறு: தஞ்சையில் கணவன் - மனைவி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவையாறு அருகே தில்லைஸ்தானம் உப்புமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சுரேஷ் (40). இவர் திருவையாறில் மின்னணு சாதன பொருள்கள், கைப்பேசி ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுதா (35). இவர்களுக்கு கோவையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் சூர்யா (18), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுதர்சன் ஆகிய இரு மகன்களும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சுஜிதா (10) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மகனும், மகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு கணவன் - மனைவி இடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தஞ்சாவூரில் உள்ள சுதாவின் தாய் கிருஷ்ணவேணிக்கு செல்லிடப்பேசியில் பேசிய சுரேஷ், தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனடியாகப் புறப்பட்டு வருமாறும் கூறினார்.
இதையும் படிக்க.. ஹேம மாலினியின் கன்னங்களோடு தனது தொகுதியின் சாலையை ஒப்பிட்ட அமைச்சர்
இதையடுத்து, தனது மகள் வீட்டுக்கு கிருஷ்ணவேணி சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் சுதாவும், சுரேசும் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, மருவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தண்ணன் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மருவூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.