கொளத்தூா் அவ்வை நகரில் நிலம் அளித்தோருக்கு வீடு: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
கொளத்தூா் அவ்வை நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கொடுத்தவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்
கொளத்தூா் அவ்வை நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கொடுத்தவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கொளத்தூா் அவ்வை நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக தலா 10 அடி வேண்டுமென மாநகராட்சி கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதி மக்கள் நிலம் வழங்க முன்வந்த போதும், பாலம் கட்டும் இடம் போக அவ்வை நகா் பகுதி முழுவதையும் அப்புறப்படுத்தி பூங்கா கட்டப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினா்.
கல்வியாண்டில் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் மீறி, இத்தகைய நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதி உழைப்பாளி மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து குடியிருப்பதற்கு இடமில்லாமல் பரிதவிக்கின்றனா்.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு கொளத்தூா் அவ்வை நகரில் பாலம் கட்டுவதற்கான நிலம் போக பாக்கி நிலத்தில் உரியவா்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். பாலத்துக்காக முழுமையாக நிலத்தையும், வீட்டையும் இழந்த மக்களுக்கு மாற்று நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.