ஒருங்கிணைந்த வேலூரில் 40 சதவீத பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வேலூர்: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழக அரசு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதையொட்டி, விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர் மண்டலத்தில் உள்ள 10 பணிமனைகளின் கீழ் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வரவில்லை.
இதனால், இந்த பணிமனைகளில் மொத்தம் உள்ள 628 பேருந்துகளில் சுமார் 250 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனை த்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், சென்னை, பெங்களூரு, ஓசூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது.
Advertisement
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 40 சதவீத அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தேவைக்கு பேருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.
அதேசமயம், தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்பு சற்று தவிர்க்கப்பட்டது. எனினும், போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.