ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை தெரிவித்தது:
ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்களுக்குப் பணி ஓய்வு பலன்கள் கொடுக்காமல் ரூ. 8,000 கோடி நிலுவை வைத்துள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் நிலைமையும் அதேபோல ஆக்குவதற்காகத்தான் ஓய்வு பெறும் வயதை 60 என அரசு அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கடுமையாகப் பாதிக்கப்படும். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தமிழக அரசுதான் காரணம்.
இன்றைக்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் உடன் திமுக பேசுகிறது. அடுத்த கட்டமாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே இரட்டை இலக்கத்தில் போட்டி போட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதற்காக வற்புறுத்துவோம். சசிகலாவின் வருகை தமிழ்நாட்டு அரசியலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுகவில் வேண்டுமானால் கூடுதலாகக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்குச் செல்வாக்குக் குறைந்துவிட்டதால் தென் மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்றார் பாலகிருஷ்ணன்.