நெல்லையப்பர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
தென்தமிழகத்தில் 3 நாள்கள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாளையங்கோட்டையில் கல்வியாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலை நடத்தினார்.
தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலுக்குச் சென்றார். அவருக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் வெள்ளி செங்கோல் கொடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலில் காந்திமதியம்மன் சன்னதிக்கு சென்ற ராகுல்காந்திக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சுவாமி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
நெல்லையப்பர் கோயிலின் சிறப்புகள், இசைத்தூண்கள், கல்சிற்பங்களின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரதவீதிகளில் காரில் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.