அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்குவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு (2020-21-ஆம்) கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தப் புள்ளி கோரியது.
இந்த ஒப்பந்தப்புள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தாா்.