தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8.10 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக் கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர் போட்டி காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. அதனை வீரர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெறும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டி முதல் சுற்றில் 68 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 2 ஆம்புலன்ஸ்கள், மாடு பிடி வீரர்களுக்கு 8 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
அவனியாபுரத்தில் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 8 பேர் காயம் அடைந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த இருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்க பட்டனர்.
மாடு பிடி வீரர்களுக்கு மதுரை நகர்நல அலுவலர் குமரகுரு தலைமையில் 14 மருத்துவக்குழுக்களும், காளைகளுக்கு மதுரை மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் ராஜதிலகன் தலைமையில் 60 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டில் கலப்பின காளைகள்:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலப்பின காளைகள் பங்கேற்பதை தடுக்க 4 இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வாடிவாசலுக்கு காளைகள் அனுப்பப்பட்டன. இதுவரை 7 கலப்பின காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு தண்ணீர்த் தொட்டி: காளைகளுக்கு தீவனம்:
மதுரை மாநகராட்சி சார்பில் அவனியாபுரத்தில் மாடு பிடி வீரர்களுக்கு 15 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகளுக்கு தேவையான தீவனம் வழங்கப்படுகிறது.