திருப்புவனம் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சுப்பிரமணியன் முதலில் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார்.
அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து மாத்திரை கையிருப்பு, நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி குறித்து அங்கிருந்த மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் விபரம் கேட்டறிந்தார்.
பின்னர் சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அவர் பார்வையிட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது .
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கவும் மருந்து மாத்திரைகள் எப்போதும் கையிருப்பு வைத்திருக்கவும் அமைச்சர் சுப்பிரமணியன் மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், சுகாதார நிலையத்திற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத் தலைவர் சேங்கைமாறன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.